×

வாகன புகை பரிசோதனை செய்ய புதிய ஆப்

சேலம், மே 6: சேலம் மாவட்டத்தில், புதிய செயலியை இன்று (6ம்தேதி) முதல் அனைத்து வாகன புகைப் பரிசோதனை மையங்களும் நிறுவி, அதன் மூலம் மட்டுமே வாகன புகைப் பரிசோதனைகளை செய்ய வேண்டும். அவ்வாறு செய்யத்தவறும் மையங்களுக்கு சீல் வைக்கப்படும் என்று போக்குவரத்து அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் சேலம் மேற்கு, சேலம் தெற்கு, சேலம கிழக்கு, சங்ககிரி, மேட்டூர், ஆத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளன. இங்கு வாகன ஓட்டுனர் பழகுநர் உரிமம், ஓட்டுனர் உரிமம், வாகன தகுதிச்சான்று (எப்.சி.,), பர்மிட் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இவை அனைத்து ஆன்லைன் மூலமே விண்ணப்பம் செய்து சோதனைக்கு மட்டும் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு வருகின்றன.
இதனிடையே, வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு தகுதிச்சான்று பெற வரும் வாகனங்கள் மட்டும் புகை பரிசோதனை செய்யப்படுகிறது. அதிலும், புகை பரிசோதனை உரிய முறையில் செய்யாமல் சான்றிதழ் வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. இதையடுத்து வாகன புகை பரிசோதனை மையங்களில் புதிய செயலிலை நிறுவ வேண்டும் என போக்குவரத்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

சேலம் மாவட்டத்தில், 27 வாகன புகை பரிசோதனை மையங்கள் இயங்கி வருகின்றன. தினசரி 100 முதல் 150 வாகனங்களுக்கு இங்கு புகை பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த மையங்களில் இன்று (6ம் தேதி)முதல் புதிய செயலியை நிறுவி அதன் மூலம் புகை சான்றிதழ் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சேலம் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கூறியதாவது: மாநிலம் முழுவதும் 534 வாகன புகை பரிசோதனை மையங்கள் இயங்கி வருகின்றன. சென்னை உள்ளிட்ட பெரும் நகரங்களில் வாகனங்களின் மூலம் வெளியிடப்படும் புகை அளவு அதிகரிக்கும் காரணத்தால் காற்று மாசு ஏற்பட்டு அதனால் நுரையீரல் தொடர்பான பாதிப்புகள் பொது மக்களிடையே ஏற்படுகின்றது. இதனை கட்டுக்குள் வைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த பரிசோதனை மையங்களில், ஒரு சிலவற்றில் வாகனங்களை கொண்டு வராமலேயே பரிசோதனை செய்யப்பட்டும், ஒருசிலவற்றில் அங்கீகரிக்கப்பட்ட சோதனை செய்யும் நபர் இல்லாமல் சான்றிதழ் வழங்கப்படுவதாக புகார்கள் வந்தது. இதையடுத்து, கடந்த 13ம்தேதி (சனிக்கிழமை) மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து வாகன புகைப் பரிசோதனை மையங்களும் திடீர் தணிக்கை செய்யப்பட்டது. இதில் 50 புகை பரிசோதனை மையங்களில், அங்கீகரிக்கப்பட்ட சோதனை செய்ய வேண்டிய நபர் இல்லாமல் வேறொருவர் பணியில் இருந்தது, உரிமம் வழங்கப்பட்ட இடத்தில் இல்லாமல் வேறு இடத்தில் இயங்கியது தெரியவந்தது.

வாகன புகைப் பரிசோதனை மையங்களில் செயல்பாட்டை மேலும் மேம்படுத்தவும், புகார்களுக்கு இடமளிக்காத வகையில் தொழில்நுட்பங்களை புகுத்தவும் துறை மூலமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதனடிப்படையில், தற்போது பியூசிசி 2.0 வெர்சன் (பொல்யூசன் அன்டர் கண்ட்ரோல் சர்டிபிகேட்) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாகன புகைப் பரிசோதனை மையத்துக்கென தனிப்பட்ட தொலைபேசி, உரிமதாரரால் பயன்படுத்தப்படும். அந்த தொலைபேசியில் இந்த பியூசிசி 2.0 வெர்சன் ஆப்-ஐ நிறுவி இயக்க வேண்டும். இந்த புதிய வெர்சன் ஜிபிஎஸ் வசதியுடன் கூடியதாகும்.

இந்த செயலி நிறுவப்பட்ட தொலைபேசி தொடர்புடைய வாகன புகைப் பரிசோதனை மையத்திலிருந்து, 30 மீட்டர் சுற்றளவுக்குள் மட்டுமே செயல்படும். இதன் மூலம் வாகன புகைப் பரிசோதனை செய்யும் போது, இரண்டு புகைப்படங்களை (ஒன்று வாகன பதிவெண்ணை தெளிவாக காட்டும்படியும், மற்றொன்று வாகனத்தின் பதிவெண், புகை பரிசோதனை மையத்தின் பெயர் பலகை அடங்கிய முழுத்தோற்றம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சோதனையாளர் ஆகிய மூன்றும் ஒருசேர இருக்குமாறு) எடுக்கப்பட வேண்டும். மேலும் அங்கீகரிக்கப்பட்ட நபர் அந்த வாகனத்தை சோதனையிடும் போது எடுக்கப்பட்ட ஒரு வீடியோ பதிவையும் பதிவேற்ற வேண்டும். இவை பதிவேற்றம் செய்யப்பட்டால்தான் புகைப் பரிசோதனை சான்றிதழ் பதிவிறக்கம் செய்யவோ அல்லது பிரிண்ட் எடுக்கவோ இயலும்.

சோதனை செய்யப்படும் வாகனங்கள், அந்த புகை பரிசோதனை மையத்திற்கு கொண்டு வந்து சோதனை செய்யப்படுவதை துல்லியமாக காட்டும் புவியிடக் குறியீடு இருப்பதனால், சோதனை மையத்திற்கு வாகனங்களை கொண்டு வராமலேயே புகைப் பரிசோதனையை இனி செய்ய இயலாது. மேலும், புகைப் பரிசோதனை மையங்கள், வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வழங்கியுள்ள மென்பொருளை தங்களது கருவியை பொருத்தினால் மட்டுமே இந்த செயலி செயல்படும். இந்தியாவிலேயே மூன்றாவது மாநிலமாக, தமிழ்நாட்டில் இந்த புதிய நடைமுறை இன்று (6ம்தேதி) முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது.

இந்த புதிய பியூசிசி 2.0 வெர்சன் குறித்த செயல்முறை விளக்கம், சேலம் கிழக்கு, சேலம் மேற்கு, சேலம் தெற்கு, சங்ககிரி, ஆத்தூர், மேட்டூர் ஓமலூர், வாழப்பாடி ஆகிய வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அனைத்து வாகன புகைப் பரிசோதனை மைய சோதனையாளர் மற்றும் உரிமைதாரர்கள் ஆகியோருக்கு, கடந்த 3ம்தேதி வழங்கப்பட்டது. இந்த புதிய பியூசிசி 2.0 வெர்சனை இன்று (6ம்தேதி) முதல் அனைத்து வாகனப் புகைப் பரிசோதனை மையங்களும் நிறுவி, அதன் மூலம் மட்டுமே வாகனப் புகைப் பரிசோதனைகளை செய்ய வேண்டும். அவ்வாறு செய்ய தவறும் மையங்கள், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மூடி சீல் வைக்கப்படும். இவ்வாறு சேலம் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post வாகன புகை பரிசோதனை செய்ய புதிய ஆப் appeared first on Dinakaran.

Tags : Salem ,Dinakaran ,
× RELATED சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர்...